Saturday, November 15, 2014

மனித இனம் சிறப்பானதா? புறக்கணிக்கத்தக்கதா? அதன் எதிர்காலம் என்ன?

பூமியில் உள்ள மொத்த கடற்கரைகளிலும் உள்ள மொத்த மணல் துகள்களின் எண்ணிக்கை எவ்வளவோ அதை விட அதிக நட்சத்திரங்கள் பிரபஞ்சத்தில் உள்ளன.


சரி நாம் வானத்தில் வெறும் கண்ணால் எத்தனை நட்சத்திரங்கள் பார்க்கிறோம்?
கடல்மணலில் விளையாடிய பிறகு கையில் ஒட்டிக்கொண்டிருக்கும் மணல்களின் எண்ணிக்கை எத்தனை தேறும்? சில ஆயிரங்கள் இருக்கும். அத்தனை நட்சத்திரங்களைத்தான் வெறும் கண்ணால் பார்க்கிறோம். தூரப்பார்வை கிட்டப்பார்வை கோஷ்டிகளுக்கு சற்று இந்த எண்ணிக்கை சரிவராமல் போகலாம்.
.
சரி எப்படி பிரபஞ்சத்தில் உள்ள நட்சத்திரங்களின் எண்ணிக்கை, கண்ணால் பார்பவற்றை விட இவ்வளவு அதிகம் என்று கண்டுபிடித்தோம்? இவற்றை பூமியில் பல இடங்களில் தொலைநோக்கிகள் வைத்து பார்த்தது மட்டும் அல்லாமல் வானத்திலும் தொலைநோக்கிகள் செலுத்தி பார்த்து வருகிறோம். மேலும் இந்த நட்சத்திரங்களை பார்க்க கண்ணால் பார்க்கும் ஒளியை தவிர, பார்க்க முடியாத ஒளிகளான எக்ஸ் கதிர், காமா கதிர், அகச்சிவப்பு கதிர், மைக்ரோ அலைகள், ரேடியோ அலைகள் போன்றவற்றை வைத்தும் பார்க்கிறோம்.
.
இவற்றில் பெரும்பாலான நட்சத்திரங்களை சுற்றிவரும் கிரகங்கள் உள்ளன. அதில் ஒரு நட்சத்திரத்தை சுற்றி வரும் ஒரு கிரகத்தில் நாம் இருக்கிறோம். இந்த மகா பிரபஞ்சத்தில் நம் இடத்தை இப்படி புரிந்து கொண்டுள்ளோம். புறக்கணிக்கத்தக்க அளவு தொலைந்த மூலைதான் இது.
.
அந்த மற்ற கிரகங்களில் உயிர் இருக்கிறதா என்று ஆராய்ந்து வருகிறோம். இன்னும் ஒரு சதவீத கிரகங்களை கூட ஆராயவில்லை. ஆனாலும் தேடிய சொற்ப அளவு கிரகங்களில் இதுவரைக்கும் உயிர்கள் இருக்கும் ஒரே கிரகம் என்று ஆணித்தரமாக நிரூபிக்கப்பட்ட கிரகம் நம் பூமிதான்.
.
நாகரிக வளர்ச்சி, அறிவியல் வளர்ச்சி பெற்று மற்ற கிரகங்களில் உயிர்களை தேடும் உயிரினமும் நம் பூமியில்தான் உள்ளது. இந்த காரணங்களால், என்னதான் பிரபஞ்ச பெருவெளியின்  புறக்கணிக்கத்தக்க மூலையில் இருந்தாலும், மிகவும் பாதுகாக்கப்பட வேண்டிய ஒரு சிறப்பான இடத்தை பூமி பெறுகிறது.
.
இதை திறம்பட நடத்தவேண்டிய நாம்தான் நாம் அனைவரும் ஒரே இனம் என்பதை உணரவேண்டும். ஆனால் என் நாடு உன் நாடு என்று பூமியை கோடுபோட்டு பிரித்து வைத்திருக்கிறோம். ஒருவகையில் பார்த்தால் நாட்டுப்பற்று, மொழிப்பற்று போன்றவையும் கூட இனப்பற்று, மதப்பற்று, ஜாதிப்பற்று போல பிரிவினைக்கு வழிவகுப்பவையே. நாம் மனித இனத்தின் உண்மையான மகத்துவத்தை இந்த சிறு சிறு விஷயங்களை மகத்துவம் என்றெண்ணி சிதரடிக்கிறோம். இதே போன்ற காரணங்களுக்காக நாளை போர் புரிந்து அணுகுண்டு வீச்சில் நம் இனத்தை நாமே அழித்துக்கொள்ளாமல் இருந்தால் சரி.
.
அறிவுள்ள உயிரினம் என்பது பிரபஞ்சத்தில் நினைத்துப்பார்க்க முடியாத அளவிற்கு அரிதான விஷயம். பிரிவினைகள் பாராட்டுவதை தவிர்த்து இவ்வளவு அரிதான அறிவை நாம் ஒழுங்காக பயன்படுத்தினால் மட்டும்தான் மனித இனத்திற்கு எதிர்காலம்.

Thursday, November 13, 2014

இன்டர்ஸ்டெல்லார் ஸ்பேஸ் - உயிரின் ஆரம்ப இடம்?




தற்போது ரொசெட்டா எனும் விண்கலம் வெற்றிகரமாக ஒரு குறிப்பிட்ட (குறிவைக்கப்பட்ட) வால் நட்சத்திரத்தில் இறங்கி உள்ளது. மனிதத்தின் இன்னொரு முக்கியமான சாதனை இது. வால் நட்சத்திரம் ஒரு நட்சத்திரம் அல்ல. அது ஒரு பெரிய பாறை போலத்தான். ஆனால் அதில் பனிக்கட்டியும் அதிகம் இருக்கும். வால் நட்சத்திரங்களும் மற்ற கிரகங்களை போல சூரியனை சுற்றி வருகின்றன. அப்படி சூரியனை நோக்கி ஒரு வால் நட்சத்திரம் செல்லும்போது அதிலுள்ள பனி ஆவியாகி வால் போல தெரிகிறது. அவ்வளவுதான். விண்கலம் எடுத்த புகைப்படங்களை இந்த லிங்கில் பாருங்கள். நம் பூமியில் உள்ள மரங்களற்ற  மலைச்சரிவுகள் போன்றதொரு இடம்.


இந்த விண்கலத்திற்கும் நம் பூமியில் முதன்முதலில் உயிர் தோன்றிய கதைக்கும் சம்மந்தம் இருக்கிறது.

மனிதர்கள் உட்பட அனைத்து உயிரினங்களும் பல வகை புரதங்களால் (
Proteins) ஆனவை. இந்த புரதம் என்பது ஒரு மூலக்கூறு. அதனை உடைத்தால் அமினோ அமிலங்கள் என்னும் சிறிய மூலக்கூறுகள் கிடைக்கும்.

இப்படி  உடைவது தான் நாம் சாப்பிடும் சாப்பாட்டிற்கு வயிற்றில் நேரும் கதி. இதைத்தான் நாம் சாப்பாடு ஜீரணம் ஆகிறது என்கிறோம். பின் ரத்தம் மூலம் இந்த சிறிய மூலக்கூறுகள் உடல் முழுதும் எடுத்துசெல்லப்பட்டு அங்கே மீண்டும் புரதமாக மாறுகின்றன. இப்படித்தான் நம் உடல் வாழ்கிறது.

சரி முதல் உயிர் எப்படி தோன்றி இருக்க முடியும்? முதலில் எளிய மூலக்கூறுகள் இணைந்துதானே பெரிய மூலக்கூறு உண்டாகி இருக்க முடியும்? இந்த அமினோ அமிலங்கள் முதலில் உண்டாகி இருந்தால்தான் அவை இணைந்து புரதங்களும், அதிலிருந்து டி என் எ வும்,  செல்களும் உயிர்களும் தோன்றியிருக்க முடியும். இதெல்லாம் நடப்பதற்கு சூழ்நிலை தூண்டல்கள் தேவை. பூமியில் இந்த தூண்டல்கள் கிடைத்து, அதனால் உயிர்கள் உண்டாகி இருக்கலாம்.

முக்கியமான விஷயம், இந்த அமினோ அமிலங்கள் பூமியில் மட்டுமல்ல, பிரபஞ்சப் பெருவெளியின் மற்ற பல இடங்களிலும்  எக்கச்சக்கமாக இருக்கின்றன. வால்நட்சத்திரங்களிலும் விண்கற்களிலும் உள்ளன. மேலும் நட்சத்திரங்களுக்கு இடைப்பட்ட பேரிடைவெளிகளில் (
Interstellar space) அங்கங்கே மிகப்பெரும் மேகங்கள்போல திரண்டு உள்ளன.

உயிர்களின் அடிப்படை தேவையான அமினோ அமிலங்கள், இந்த அளவுக்கு பிரபஞ்சம் முழுக்க இருப்பதால், பூமி போன்ற எத்தனை கிரகங்களில் உயிர்கள் தோன்றி இருக்கின்றனவோ என்ற சிந்தனை வருதை தவிர்க்க முடிவதில்லை.

இந்த ரொசெட்டா விண்கலத்தின் ஒரு முக்கிய குறிக்கோள் இந்த வால் நட்சத்திரத்தில் இருக்கும் அமினோ அமிலங்களை பற்றியதுதான். இந்த மூலக்கூறுகளில்  சமச்சீரின்மை (
chirality) என்ற ஒரு வேதியியல் பண்பு உள்ளது. அதில் இரு வகைகள் உள்ளன. ஆனால் ஒருவகை சமச்சீரின்மை மட்டும் பிரபஞ்சத்தில் உள்ள அமினோ அமிலங்களில் மிகுந்து காணப்படுகிறது. அதற்கான காரணத்தை ஆராய்வது இந்த விண்கலத்தின் ஒரு நோக்கம். இது உயிர்களின் தோற்றம் பற்றிய புரிதலை மேலும் தெளிவாக்கலாம்.

இந்த ப்ராஜெக்ட், நாம் வாழும் காலம் எவ்வளவு உற்சாகம் ஊட்டும் காலம் என்பதை மீண்டும் நினைவுபடுத்துகிறது. அதாவது, உயிர்களின் தோற்றம்  போன்ற பல கேள்விகளுக்கு பதில் தேடும் ஆர்வம் வருவது மனித இயல்புதான். மனித இனம் சுமார் ஒரு மில்லியன் வருடங்களாக உள்ளது. ஆனால் மன்னனாகவே இருந்தாலும் இந்த ஒரு மில்லியன் வருடங்களில் கடைசி
50 வருடங்களுக்கு முன்பாக எப்போது பிறந்திருந்தாலும், இப்படிப்பட்ட கேள்விகளுக்கு பதில் தேடி இருக்க முடியாது. அதை செய்வதற்கான தொழில்நுட்ப அறிவும் அனுபவமும் வாய்க்கப்பெற்ற யுகத்தில் நாம் இருப்பதே உற்சாகமான விஷயம்தான்.

Monday, November 10, 2014

உயிர்களின் சிற்பி




நாம் பார்க்கும் வாழை பழங்கள் விதை இல்லாமல் உள்ளன. ஆனால் காட்டில் இயற்கையாக வளரும் பெரும்பாலான வகை வாழைப் பழங்கள் அதிகமான விதைகளுடன் இருக்கும். மனிதர்கள் இப்படிப்பட்ட பழங்களை சிரமப்பட்டு சாப்பிட வேண்டும்.
விவசாயத்திற்கு முந்திய காலத்தில் வேறு வழி இல்லை. ஆனால் அப்போது மிக அரிதான சிலவகை வாழைப்பழங்கள் மட்டும் விதை இல்லாமல் இருந்தன. பிற்காலத்தில் விவசாயம் செய்ய ஆரம்பித்ததும் மனிதர்கள் அந்த அரிய வகை வாழைகளை மட்டும் தேர்ந்தெடுத்து வளர்த்து விவசாயம் செய்து சாப்பிட்டு வந்தனர். அதனால் அந்த வகை வாழைகளுக்கு இன்று வரை அழிவில்லை.

மனிதர்கள் இப்போது உலகம் முழுவதையும் ஆக்கிரமித்து கொண்டதால் இந்த வகை வாழைகளை மட்டுமே பார்க்க முடிகிறது. விதை அதிகமான மற்ற இனங்கள் பல அழிந்து விட்டன. சில காடுகளில் மட்டும் சில அரிய வகை காட்டு வாழைகள் தப்பித்துள்ளன.

மனிதர்களுக்கு பயன் தருகின்ற காரணத்தால்தான் நம்மை சுற்றி உள்ள கிட்டத்தட்ட எல்லா  தாவரங்களும் (உணவு, உடை, இருப்பிடம், மருந்து, எரிபொருள் தருபவை), விலங்குகளும் (மாமிசம், பால், உடை, பாதுகாப்பு, நட்பு தருபவை) நம்மிடையே உள்ளன. அவற்றின் மற்ற வகைகள் மனிதர்களுக்கு பயன் தராதததால் அழிக்கப்பட்டு விட்டன அல்லது காட்டில் மட்டும் இருக்கும் அரிய இனங்களாக சுருங்கிவிட்டன. இதற்கு பெயர்தான் ‘செயற்கை தேர்வு’. இதை மனிதர்கள் சில ஆயிரம் ஆண்டுகளாக மட்டுமே செய்கின்றனர்.

சில ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக மட்டுமே செய்யப்பட்டாலும் ‘செயற்கை தேர்வு’ என்பது உலகையே மாற்றி விட்டது என்பது புரிகிறது. ஆனால் பல நூறு  மில்லியன் வருடங்களாக ‘இயற்கை தேர்வு’ என்ற ஒன்று  நடைபெற்றுக்கொண்டே இருக்கிறது. அதாவது இயற்கை உயிர்களை தேர்ந்தேடுத்துக்கொண்டே வந்திருக்கிறது. கவனிக்க வேண்டியது இந்த கால அளவுதான். பல நூறு மில்லியன் ஆண்டுகள். கிரகிக்க கடினமான இருக்கும் அளவிற்கு ஆழமான கால அளவு இது.

இந்த இயற்கை தேர்வால் என்ன நடந்திருக்கும்? மிக மிக பெரிய விளைவு ஒன்று நடந்திருக்கிறது. உலகில் இருக்கும் அத்தனை உயிர் வகைகளும், அவற்றுக்கிடைப்பட்ட ஒற்றுமைகளும், வேற்றுமைகளும் இந்த இயற்கை தேர்வின் விளைவுதான். இயற்கையில் ஒத்துபோக முடியாத, சமாளிக்க முடியாத உயிரினங்கள் அழிந்துவிடும்.

கவனிக்கவும் மிக வல்லமையாக இருக்க வேண்டியதில்லை. இயற்கை வீசும் பல்வேறு நிபந்தனைகளுடன் ஒத்துப்போகும் அல்லது சமாளிக்கும் அளவு இருக்க வேண்டும். இப்படி இல்லாததால் உலகில் இது வரை வாழ்ந்த இனங்களில்
99.9% அழிந்து விட்டன. உதாரணமாக டைனோசார்கள் பலசாலிகள். அதனால்தான் பல சூழ்நிலைகளை சமாளித்தன. ஆனால் உத்தேசமாக இயற்கை வீசிய எரிகல் நெருப்பு நிபந்தனையில் தோற்றுப்போயின. அதே நிபந்தனையை குட்டி அளவிருந்த உயிரிகள் சமாளித்துவிட்டன. அதாவது Survival of the fittest என்பதை விட survival of the most adaptable என்பதுதான் இயற்கை தேர்வின் சரியான புரிதல். புரிந்துகொண்டு உலகை பார்த்தால் உயிர்களின் மகத்துவம் சொல்லும் புரிதல்.