Saturday, June 19, 2021

முரண்சூழ் கர்மா

முதலில் எளிய கேள்விகள்

"நல்லவங்களுக்கு நல்லதுதான் நடக்கும்" னு நம்புனா எவ்ளோ நல்லா இருக்கு. "ஒருத்தன் அநியாயம் செஞ்சா அவனுக்கு கெட்டது கண்டிப்பா கிடைக்கும்" னு நம்புனா எவ்ளோ நல்ல இருக்கு. ஊழ்வினை அல்லது கர்மா  போல ஒரு மனஆறுதல் தர கருத்து வேற எதுவும் இருக்க முடியாது.

அப்போ ஒரு நல்லவனுக்கு கெட்டது நடக்கும் போது என்ன தோணும்?
"யார் செஞ்ச பாவமோ இப்போ இவன தாக்குது. ஒன்னு அவன் அப்பா அம்மா செஞ்ச பாவமா இருக்கும். இல்லனா அவனே போன ஜென்மத்துல செஞ்ச பாவமா இருக்கும். அதான் இப்போ அனுபவிக்கிறான்.  எல்லாம் கர்மா" னு தோணும். கர்மாவ இன்னொரு ஜென்மம் வரைக்கும் கொண்டு போக வேண்டி இருக்கு. பல ஜென்மங்களுக்கு வேல செய்றதுதுதானே கர்மாங்குற கருத்தே. சரி, அப்டினா முதன் முதல்ல தோன்றிய மனிதர்கள் யாருக்குமே முன் ஜென்மம் இல்ல தானே. அப்போ கர்மாவும் இருக்க முடியாதுதானே. அப்போ அதுல ஒருத்தர் எந்த கெட்டதும் பண்ணாம இருக்கும்போது அவங்களுக்கு கெட்டது நடந்தா, அத எப்படி கர்மாவ வச்சி புரிஞ்சிக்கிறது?

இன்னும் சில தகவல்கள் தெளிவா புரிஞ்சா கர்மா ல இருக்க முரண்கள் அபத்தங்கள் தெரியுது.
1. பூமில மனிதர்களோட எண்ணிக்கை கடந்த 200 வருடங்கள்ல மட்டும் (தொழிற்புரட்சி, தடுப்பூசிகள் வந்த பிறகு) 100 கோடிக்கு கீழ இருந்து 700 கோடியா மாறி இருக்கு. மனித வரலாற்றுல ஆயிரக்கணக்கான வருடங்களா எப்பவுமே 100 கோடிக்கு மேல மனிதர்கள் இருந்ததில்லை. இந்த வரைபடத்துல இந்த தகவல் இருக்கு. மக்கள்தொகை பத்தின எந்த அதிகாரபூர்வ மூலத்துலயும் இந்த தகவல் கிடைக்கும்.

அப்டினா 600 கோடி அதிக மனிதர்கள் இந்த கடைசி 200 வருஷத்துல வந்திருக்கோம். இந்த தகவலையும் கர்மாங்குற கருத்தையும் சேத்து யோசிச்சு பாத்தா திடீர்னு ஒரு 600 கோடி புதிய மனித ஆன்மாக்கள் உண்டானதா? புதுசுனா அப்போ அந்த ஆன்மாக்களுக்கு முன் ஜென்மத்து கர்மா ஒன்னும் இருக்க முடியாதுதானே. அப்போ அதுல ஒருத்தர் எந்த கெட்டதும் பண்ணாம இருக்கும்போது அவங்களுக்கு கெட்டது நடந்தா, அத எப்படி கர்மாவ வச்சி புரிஞ்சிக்கிறது?

இன்னும் பெருசா யோசிச்சா முன் ஜென்மத்துல இந்த 600 கோடி பேரும் மனுஷனா தான் இருந்திருக்கணும் அப்டிங்குற அவசியம் இல்ல. வேற மிருகமா இருந்து பாவம் செஞ்சி அதனால கர்மா உண்டாகி அப்புறம் மனுஷனா பொறக்கும்போது அதனால பாதிக்கப்படலாம் னு தோணலாம். இந்த கருத்துல நெறய முரண்கள் இருக்கு. மொதல்ல மனுஷன தவிர எந்த உயிரினமும் உயிர் வாழவும் சந்ததியை பரப்பவும் தான் எல்லா காரியத்தையும் செய்யுது. அதுல போயி ஒரு புலி இன்னொரு உயிரை கொன்னு சாப்டா பாவம் னு சொல்ல முடியாது. புலியோட அமைப்பே அதான். அந்த உயிரினம் அப்டி உண்டானது யார் குற்றம்? அப்புறம்  தாவரங்கள் உயிர் இல்லையா? அத கொன்னு சாப்டா பாவம் இல்லையா? மானாவோ மாடவோ பொறந்தா பாவகணக்கே ஏறாதா?  
எல்லாத்துக்கும் மேல ஏற்கனவே இருந்த உயிரினங்களோட அடுத்த பிறவிதான் இந்த 600 கோடி புதிய மனிதர்கள் அப்டினு வச்சிக்கிட்டா பூமில உயிர்களின் எண்ணிக்கை எப்பவுமே மாறாத ஒரு எண்ணா? இத இன்னொரு தகவல இணைச்சி யோசிப்போம். பூமில இது வரைக்கும் 5 பேரழிவுகள் நடந்து இருக்கு. இனவழிப்பு நிகழ்வு னு பேரு. எரிகற்கள், பருவநிலை மாற்றம், பெரும் எரிமலை வெடிப்பு இப்டி பல காரணங்கள். இந்த லிங்க் ல பாக்கலாம் அத பத்தி. இந்த ஒவ்வொரு நிகழ்வுலயும், பல ஆயிரம் உயிர்வகைகளே பூமில இருந்து காணாம போயிருக்கு. அப்போ உயிர்களோட எண்ணிக்கை ஒரு மாறிலி னு சொல்ல முடியுமா? என்ன ஒரு அபத்தமான கருத்து கர்மாங்குறது.

சரி ஒரு அறம் சார்ந்த கேள்வி. ஊட்டச்சத்து குறைப்பாடோட இருக்கோம்னு கூட தெரிஞ்சிக்க முடியாத, கஞ்சிக்கே வழி இல்லாத, ஒரு ஏழை ஆப்பிரிக்க நாட்ல பொறந்த, படிப்பையோ ஒரு சாதாரண வாழ்க்கையையோ கூட நெனச்சே பாக்க முடியாத, தோலெல்லாம்  எலும்போட ஒட்டிப்போன, அப்பா அம்மாவையும் உள்நாட்டு போர்ல இழந்த, யாருமே உதவிக்கு வராத, ஒரு 2 வயசு கொழந்தயோட நெலமையா யோசிங்க. இது ஒன்னும் இப்போ நடக்காத விஷயம் இல்ல. அந்த குழந்தைக்கு உதவி செய்யறதுக்கான முயற்சி எடுக்க முடியாத நெலைமைல நாம இருக்கோம்னு வைங்க. ஐயோ நாம ஒன்னும் பண்ண முடியலையே னு வருத்தமும், கோபமும், ஆற்றாமையும், குற்ற உணர்ச்சியும் வரது நியாயமா? இல்ல "அந்த குழந்தையோட முன் ஜென்ம கர்மாவால அது அனுபவிக்குது, அனுபவிக்கட்டும்" னு நெனச்சி மன ஆறுதல் அடையுறது நியாயமா?

கர்மாவால என்ன நல்லது?

இந்து மதம் மட்டும் அல்ல புத்த மதத்திலும் கர்மா மிகவும் ஆணித்தரமாகவே இருக்கு. ஏன்? கடவுளை பற்றி கருத்து கூறாத புத்தரும் கர்மா உண்டுனு  சொன்னது ஏன்?
கர்மாவால வர ஒரு உருப்படி நல்லது இது தான். மக்கள் அறத்தோட வாழனும் னா அடுத்த பிறவியை பற்றிய பயத்த உண்டு பண்ணனும். இந்த காரணம்தான் கர்மாவ இந்த மதங்கள் அடிப்படை உண்மையா வச்சிருக்க காரணமா? இல்ல கர்மாவுக்கு வேற அர்த்தங்கள் இருக்கா?
தண்டனை பயத்தால ஒருத்தர் அறத்தோட வாழுறாருனா அப்போ உண்மையிலேயே அவர் நல்லவர் இல்லையே. தண்டனைக்கு பயந்தவர் அவ்ளோதானே? சுயமா யோசிச்சு நல்லது பண்ணாதானே நல்லவர்.

சரி வெகுஜனத்துக்கு இதெல்லாம் புரிஞ்சி சுயமா நல்லவங்களா இருக்க முடியாது. கர்மாதான் சரி பயம்தான் சரி னு அப்டியே விடலாமா? இல்ல இது பொய்தான்னு உதிர்த்திடலாமா? வெகுஜனம் இத புரிஞ்சிக்கிற அளவுக்கு வர முடியலன்னு இதுக்கு சமமா உண்மையை, அறிவியலை அடிப்படையா வெச்சமாதிரி வேற மாற்று கருத்துக்களை தேடலாமா? அப்படி வர கருத்துக்கு கர்மா அளவுக்கான மக்கள கட்டிப்போடுற சக்தி இருக்குமா?

 

Friday, April 29, 2016

அண்டவெளியை அகலமாக்கிய ஹப்பிள் 1


1920 க்கு முன் பேரண்டம் முழுவதும் ஒரே ஒரு நட்சத்திர கூட்டம் தான் இருப்பதாக அறிவியல் உலகம் நினைத்து வந்தது. அதுதான் நம் பால்வழித்திரள். நாம் காணும் அனைத்து நட்சத்திரங்களும், நமக்கு மிக அருகில் உள்ள நட்சத்திரமான சூரியனும்,  இந்த கூட்டத்தில்தான் உள்ளன. ஆனால் 1920 களில் இந்த ‘ஒரே ஒரு நட்சத்திர கூட்டம்’ என்ற அறிவில் ஒரு பிரம்மாண்ட மாற்றம் வந்தது. அப்போது உலகின் மிகப்பெரிய தொலைநோக்கி ஒன்று அமெரிக்காவில் இருந்தது. அதை வைத்து வானை ஆராய்ச்சி செய்ய வந்தவர்தான் எட்வின் ஹப்பிள். அவர் ஒளிமாறும் நட்சத்திரங்கள்’ என்ற ஒரு வகை நட்சத்திரங்களை தொடந்து பல இரவுகள் ஆராய்ந்தார். அதில் ஒன்று நம் பால் வழித்திரளில் உள்ள எல்லா நட்சத்திரங்களை விட பல மடங்கு தொலைவில் இருப்பதை கண்டறிந்தார். அதன் பிறகு அந்த நட்சத்திரம் இருப்பது முற்றிலும் வேறொரு நட்சத்திர கூட்டத்தில் என்று கண்டு சொன்னார். விரைவிலேயே இதே போன்று மேலும் பல நட்சத்திர கூட்டங்கள் இருப்பது தெரிந்தது. பல என்றால் பத்தோ நூறோ அல்ல. சில நூறு கோடிகள்!  பேரண்டம் எதிர்பார்த்ததை விட பல மடங்கு பிரம்மாண்டம் கொண்டது என்ற புரிதல் தொடங்கியது ஹப்பிளிற்கு பிறகுதான். அவர் பெயரை கொண்ட ஹப்பிள் தொலைநோக்கி இப்போது நம் பூமியை சுற்றிகொண்டே நம் அறிவை மேலும் அகலப்படுத்திக் கொண்டிருக்கிறது.

Wednesday, September 2, 2015

செயற்கை இலை



சூரிய ஒளி, தண்ணீர் மற்றும் காற்றிலுள்ள கார்பன் டை ஆக்சைட், இந்த மூன்றும்தான் இயற்கையில் இலைகள் உணவுதயாரிக்க பயன்படுத்தும் பொருட்கள். இந்த இடுபொருட்களை  கச்சிதமாக பயன்படுத்துவதில் இயற்கை ஒரு ஆசான்.
.
இயற்கையில் உணவு தயாரிக்க இலைகள் செய்யும் இந்த வேலையை போல, ஆய்வகத்தில் எரிபொருள் தயாரிக்க இதே போன்ற முறையை பயன்படுத்தும் முயற்சிகள் கொஞ்ச காலமாக நடைபெற்று வருகின்றன. இவை செயற்கை இலை தொழில்நுட்பம் என்ற வகையில் சேரும்.
.
ஒரு ஐந்து வருடங்களாக முயற்சி செய்து கலிபோர்னியா பல்கலைக் கழகத்தில், இப்படி ஒரு ப்ராஜக்டை செய்துள்ளனர். இதன் மூலம் சூரிய ஒளி மற்றும் காற்றிலுள்ள கார்பன் டை ஆக்சைட் ஆகியவற்றை பயன்படுத்தி தண்ணீரை (H2O) பிரித்து ஹைட்ரஜனாகவும் ஆக்ஸிஜனாகவும் இதுவரை இல்லாத அளவிற்கு மிகக் கச்சிதமாக மாற்றியுள்ளனர்.

இதனால் என்ன லாபம்? இதில் வரும் ஹைட்ரஜன் ஒரு மிகச்சிறந்த எரிபொருள். எதிர்காலத்தில் இன்னும் அதிமாகப் போகும் எரிபொருள் பற்றாக்குறைக்கு ஒரு சிறந்த தீர்வாக கருதப்படுவது ஹைட்ரஜன்.
.
இது போன்ற ஒரு ப்ராஜெக்ட் வெற்றி பெற, அமெரிக்க அரசு மிக அதிக நிதியை இந்த ஆராய்ச்சியாளர்களுக்கு அளித்து, இதற்காக ‘செயற்கை ஒளிச்சேர்க்கை மையம்’ ஒன்றையும் தொடங்கி இருப்பதுதான் காரணம்.
.
இது போன்ற ஆராய்ச்சிகள்  மக்கள்தொகையில் விரைவில் உலகின் முதலிடத்தை தொட இருக்கும் நம் இந்தியாவின் எரிபொருள் தேவைக்கு மிக அவசியம். செய்வதற்கான திறமை நம்மிடம் இருப்பதற்கு மங்கள்யானே சாட்சி.  இப்படிபட்ட ப்ராஜக்ட்களுக்கான தொலைநோக்கு திட்டங்கள் கொண்டுவரப்படுவதுதான் தேவை.

Saturday, August 29, 2015

உலகச் சவால் 1




உலகின் மிக முக்கியமான எதிர்கால சவால்களில் ஒன்று ‘ஆற்றல்’. அதாவது எரிபொருள், மின்சாரம் ஆகியன. எரிபொருட்கள் சுற்றுச்சூழலை பாதிக்கின்றன என்பது தெரிந்த விஷயமே. மின்சாரம் தயாரிக்கப்படும்போதும் சுற்றுச்சூழல் பாதிக்கப்படத்தான் செய்கிறது.
.
மின்சாரத்தை தயாரிக்க நிலக்கரியை பயன்படுத்தும் அனல் மின் நிலையங்களில் இருந்து கார்பன் டை ஆக்ஸைடு அதிகமாக வெளியேறுகிறது. இது புவி வெப்பமாதலுக்கு காரணமாகும் ஒரு முக்கியமான பச்சைவீடு வாயு (Green House Gas). இந்த அனல் மின் நிலையங்களை விட, அணுமின் நிலையங்களில் கார்பன் டை ஆக்ஸைடு கழிவுகள் மிக மிக குறைவுதான். ஆனால் இந்த அணுமின் நிலையங்களில் ‘அணுக்கரு பிளவு’ (Nuclear Fission) என்ற முறை பயன்படுத்தப்படுகிறது. இதில் ப்ளுடோனியம் போன்ற பெரிய நிறை கொண்ட அணுக்கருக்கள் பிளக்கப்படுகின்றன. இதிலிருந்துதான், கதிரியக்க கழிவுகள் வருகின்றன. இவற்றை மிக கவனமாக கையாள வேண்டி உள்ளது. புகுஷிமா சம்பவம் போன்ற ஆபத்துக்களும் இதில் உண்டு.
.
இந்த பிரச்சினைகளுக்கு உருப்படியான தீர்வுகளில் ஒன்றுதான்  ‘அணுக்கரு இணைவு’ (Nuclear Fusion). இதில் மிக லேசான ஹைட்ரஜன் அணுக்கருக்கள் இணைக்கப்படுகின்றன. இதில் நல்ல விஷயம் என்ன என்றால் கதிரியக்க கழிவுகள் வராது. ஆற்றலும் அதிகமாக கிடைக்கும். 
.
ஆனால் சவால் இதுதான். இந்த முறையின் மூலம் மின்சாரம் தயாரிக்கும் தொழில்நுட்பம் இன்னும் ஆராய்ச்சி அளவில்தான் உள்ளது. சில நொடிகளுக்கு மேல் தொடர்ச்சியாக மின்சாரம் வரும்படி செய்ய முடியவில்லை. ஆனாலும் உலக அளவில் தீவிரமாக ஆராய்ச்சிகள் நடை பெற்று வருகின்றன.  வெற்றி இன்னும் கிட்டவில்லை. இந்தியாவும் இதில் பங்கெடுத்துள்ளது. இந்த ஆராய்ச்சிக்கான நிதியில் துண்டு விழாமல் பார்த்துக்கொள்வது பொதுமக்களான நம் கடமை. நம் அரசின் கடமை.